இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் “ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அறிக்கையிடல்” எனும் தலைப்பில் இரண்டு இணையவழி கலந்துரையாடலினை நடாத்தியிருந்தது. தற்போது உலகம் முழுவதும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட்-19 (COVID–19) தொற்று நோயைப் பற்றி எமது ஊடகவியலாளர்கள் அறிக்கையிடும் போது எவ்வாறு தங்களை பாதுகாத்தல், மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போலிச் செய்திகளுக்கு இடமளியாது தகவல்களை சமூகப் பொறுப்புள்ள ஊடகவியலாளர்களாக எவ்வாறு உண்மையான விடயங்களை பாதிப்பு ஏற்படாத வகையில் அறிக்கையிடல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இந்த இணைய வழிக் கலந்துரையாடல் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் நடைபெற்றது.
முதலாவது கலந்துரையாடல் சிங்கள மொழி மூலம் மார்ச் 25, 2020 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இதில் முன்னாள் தலைமை தொற்று நோயியல் நிபுணரும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவன துணை இயக்குனரும், தென் கிழக்காசிய உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அலுவலக ஆலோசகருமான டாக்டர். நிஹால் அபேசிங்க அவர்கள் பேச்சாளராக கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 27 ஆம் திகதி நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களிற்கான கலந்துரையாடலில் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் செயலாளரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க குழு உறுப்பினருமாகிய டாக்டர். வாசன் இரட்ணசிங்கம் அவர்கள் கலந்து கொண்டார்.
மூன்றாவது கலந்துரையாடல் ஏப்ரல் 4, 2020 அன்று சிங்கள ஊடகவியலாளர்களிற்காக இடம்பெற்றது. இதில் நரம்பியல் நிபுணர் ஆலோசகர் மற்றும் முதியோர் மருத்துவத்திற்கான இலங்கை சங்கத்தின் தலைவருமாகிய டாக்டர். பத்மா குணரட்ன அவர்களும் ஹேமாஸ் வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகரான டாக்டர். அச்சலா பாலசூரிய அவர்களும் கலந்துகொண்டனர்.
ஏப்ரல் 6, 2020 அன்று நடைபெற்ற நான்காவது கலந்துரையாடலில் சமூக மருத்துவரும் சமூக மற்றும் குடும்ப மருத்துவப் பிரிவு, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய (தரம் II) டாக்டர். குமரேந்திரன் அவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானப் பிரிவு சுகாதார-பாதுகாப்பு விஞ்ஞான பீட மருத்துவ சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய டாக்டர். உமாகாந்த் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சமூக மற்றும் குடும்ப மருத்துவப் பிரிவு வருகைதரு விரிவுரையாளரும் குடும்ப மருத்துவருமாகிய டாக்டர். கோபித் இரட்ணசிங்கம் அவர்களும் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
வைத்தியர்கள் உரையாற்றுகையில் கொவிட்-19 பரவலடையும் நிலைகள், அதன் அறிகுறிகள் பற்றியும் குறிப்பிட்டனர். அத்துடன் சமூக இடைவெளியின் முக்கியத்துவம், அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்க சட்டம் மற்றும் சவர்க்காரம் கொண்டு கைகழுவுதல் எவ்வாறு பரவலை கட்டுப்படுத்தும், இந்த நோயின் போது வீட்டிலுள்ள முதியவர்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும், பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் எவ்வாறு செயற்பட வேண்டும், மேலும் ஊடகவியலாளர்கள் அறிக்கையிடலின் போது பின்பற்ற வேண்டியவை, அத்துடன் ஊடகவியலாளர்கள் மக்களுக்கு எவ்வாறான தகவல்களை வழங்க வேண்டும் அவசர தேவை நிமித்தம் வெளியில் செல்லும் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், முகக் கவசங்களை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள், தனிமைப்படுத்தப்படுதல் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். தடுப்பு மருந்து கண்டுபிடித்தல் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியதோடு இரத்தப் பரிசோதனை செய்தலின் நடைமுறைகள் அதிலுள்ள சவால்கள் போன்றவையும் பகிரப்பட்டது.
அச்சு மற்றம் இலத்திரனியல் ஊடகங்களை சேர்ந்த 76 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு கொவிட்-19 தொடர்பாக தமது சந்தேகங்களை கேள்விகள் கேட்பதன் ஊடாக தெளிவுபடுத்தியதோடு அதனது தற்போதைய நிலை, பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஒரு ஊடகவியலாளராக தளத்திற்கு செல்லும் போது எவ்வாறு செல்ல வேண்டும், சென்று வந்த பின்னர் என்ன சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணடும் போன்ற விடயங்களை வைத்தியர்களுடன் கலந்துரையாடினர்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடல் சரியான தருணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பல பயனுள்ள தகவல்களை வைத்தியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமைந்தது என பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் தெரிவித்ததோடு அதற்கு தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
கலந்துரையாடலில் பங்குபற்றியோரின் படங்கள்: